சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சிக்காக 100 சிறப்புப் பேருந்துகள்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறயுள்ள ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சிக்காக 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 9,10 ஆகிய தேதிகளில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் ஜனவரி 1 தேதி தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர். வரும் 9ஆம் தேதி தேர்த்திருவிழாவும், பத்தாம் தேதி தரிசன விழாவும் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவைக்காண வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாக போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவில். பஞ்ச பூத ஆகாயத்தலமாக சிவ பக்தர்களால் போற்றப்படுவது சிதம்பரம். இந்த ஆலயத்தில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா ஜனவரி 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

தினமும் காலை மற்றும் இரவிலும் பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெறும். இன்று 4ஆம் தேதி சனிக்கிழமை வெள்ளி பூத வாகனத்திலும்,5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளி ரிஷப வாகனத்திலும் 6ஆம் தேதி திங்கட்கிழமை இரவு வெள்ளி யானை வாகனத்திலும்,7ஆம் தேதி செவ்வாய் கிழமை இரவு தங்க கைலாச வாகத்திலும் சுவாமி வீதியுலா நடைபெறும். 8ஆம் தேதி புதன்கிழமை இரவு தங்கரதத்தில் பிக்ஷாடனர் சுவாமி வீதியுலாவும் நடைபெறும்.

9ஆம் தேதி வியாழக்கிழமை அன்று முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேரோட்டம் நடக்கிறது.10ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும்,ஸ்ரீ நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும், ஸ்ரீநடராஜரும் பக்தர்களுக்கு கட்சியளிப்பார்கள். மதியம் 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். 11ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது.

Related Stories: