வாஷிங்டன்: தீவிரவாதிகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளதால், பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதை தவிர்க்கும்படி தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரியில் தீவிரவாதிள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகள் முகாம்களை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. இருநாட்டு வான்வெளியிலும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் தாக்கப்படும் அபாயம் இருப்பதால், இந்நாட்டு வான்வெளியை தவிர்க்கும்படி தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடந்தாண்டு மார்ச்சில் எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கை இந்தாண்டு டிசம்பர் இறுதி வரை நீடித்தது.