மாயாவதி குறித்து அவதூறு பேச்சு,..நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ெசன்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக செயலாளர் சத்தியமூர்த்தி நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து பொது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி குறித்து தரக்குறைவாக பேசினார்.

நாட்டின் 3வது தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியை ஆயிரக்கண்க்கான பொதுமக்கள் கூடியிருந்த கூட்டத்தில் வேண்டுமென்றே தீய உள்நோக்கத்துடன், ஜாதி வன்முறையுடனும் ஒருமையில் அவதூறாக பேசி இழிவு படுத்தியுள்ளார். பேசியதை கேட்ட மேடையில் இருந்தோர் மற்றும் பொதுமக்கள் கேலியாக சிரித்துள்ளனர். இது மாயாவதி மீது பெருமதிப்பு வைத்துள்ள லட்சக்கணக்கான மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. நெல்லை கண்ணன் பேச்சு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. எனவே அவதூறாக பேசிய நெல்லை கண்ணன் மீது எஸ்சி எஸ்டி சட்ட பிரிவின் கீழ் கைது ெசய்ய வேண்டும்.

Related Stories: