ஹூஸ்டன்: அமெரிக்காவில் சர்ச் ஒன்றில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவின் ெடக்சாஸ் மாகாணத்தில் ஒயிட் செட்டில்மென்ட் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் வழக்கம்போல் நேற்று முன்தினம் பிரார்த்தனை நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த மர்மநபர் ஒருவர் எழுந்து நின்று திடீரென துப்பாக்கியால் சுட்டார். இரண்டு முறை மர்மநபர் சுட்டார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறி கூச்சலிட்டபடி ஆளுக்கொரு பக்கமாக ஓடினார்கள். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த தேவாலய பாதுகாப்பு குழு உறுப்பினர் ஒருவர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் பாதுகாப்பு கருதி அந்த நபரை சுட்டார். இதில் அந்த நபர் உயிரிழந்தார்.