மதுரை : இரண்டரை நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை வீடியோ செய்ய கோரிய வழக்கில் நீதிமன்றம் இந்த கேள்வியை முன்வைத்துள்ளது.
இந்த மனு நீதிபதிகள் வேலுமணி, தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே விதிமுறைகள் உள்ளதாக சுட்டிக் காட்டினர். விதிமுறைப்படி வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர் . இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகும்வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர், குறுகிய கால அவகாசம் உள்ளதால் தனித்தனியாக வீடியோ பதிவு செய்வது சாத்தியமில்லை என்றும் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார். இதனை கேட்ட நீதிபதிகள், இரண்டரை நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது என்று கேள்வி எழுப்பிய நிலையில், தன்னிச்சை அமைப்பான தேர்தல் ஆணையம் நேர்மை, நியாயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறி வீடியோ பதிவு தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.