பெண் கடத்தலை தடுக்க முயன்ற வாலிபர் ஆட்டோ ஏற்றி கொலை: திருவள்ளூர் அருகே பயங்கரம்

சென்னை: இளம்பெண்ணை கடத்துவதை தடுக்க முயன்ற வாலிபர் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நான்கு பேர் கொண்ட கொலை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த மப்பேடு கூட்டுச்சாலையில், போலீஸ் நிலையம் அருகே கடந்த 26ம் தேதி இரவு 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி நரசிங்கபுரம் செல்ல வேண்டுமென கூறியுள்ளார். ஆட்டோ டிரைவரும் அந்த இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார். அப்போது ஆட்டோவில் ஏற்கனவே நான்கு வாலிபர்கள் இருந்தனர். ஆனால் ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல், கொண்டஞ்சேரி பகுதியிலிருந்து கடம்பத்துார் செல்லும் சாலையில் வேகமாக சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூச்சலிட்டார்.

ஆனால், ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. இளம்பெண்ணின் அலறலை கேட்டு, கொண்டஞ்சேரி பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள் யாகேஷ், ஈஸ்டர், வினித், துரைராஜ் மற்றும் சார்லி ஆகியோர், தங்களது பைக்குகளில் ஆட்டோவை விரட்டி சென்றனர். இந்நிலையில் ஆட்டோவில் இருந்த இளம்பெண் சாலையில் குதித்தார். இதையடுத்து ஆட்டோ நிற்காமல் சென்றது. இதையடுத்து இரு பைக்குகளில் சென்ற இளைஞர்கள் ஆட்டோவை முந்தி நிறுத்த முயன்றனர். ஆனால், ஆட்டோவை ஓட்டிச்சென்ற வாலிபர், பைக்குகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இதில், பைக்கில் இருந்து விழுந்த தியாகராஜன் மகன் யாகேஷ்(22) படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்கென சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  யாகேஷ் இறந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: