சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு கேட்டு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு டிசம்பர் 30ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜனவரி 2ல் எண்ணப்படுகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளார். பல்வேறு இடங்களில் அதிமுக முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் வந்த நிலையில், வாக்கு பெட்டிகளில் முறைகேடு செய்யாமல் இருக்க அவற்றை பாதுகாக்க வேண்டும் என ஆர். எஸ். பாரதி வழக்கு தொடர்ந்து உள்ளார்.