மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் 41 நாட்களுக்கு பின் 119.74 அடியாக சரிந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து கடந்த 2 நாட்களாக 4,100 கனஅடியாக இருந்தது. இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யாததால், பாசனத்திற்கான நீர் தேவை அதிகரித்தது. இதனையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று முன்தினம் இரவு முதல், விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.