புதுடெல்லி: ரூ.5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை எட்ட நிலம் மற்றும் கடல்வழி எல்லையை பாதுகாப்பது மிக அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்திய உளவுத்துறை தொடர்பான 32வது கருத்தரங்கு நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது: தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சவால்களை மத்திய உளவுத்துறை கடந்த 5 ஆண்டுகளாக திறமையாக கையாண்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத சக்திகளை ஒழித்துள்ளது. 5 லட்சம் கோடி (5 டிரில்லியன்) டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை நமது நாட்டின் இலக்காக உள்ளது. இதற்கு நிலம் மற்றும் கடல் எல்லை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம். பாதுகாப்பு பிரச்னைக்கு தீர்வு காண்பவரை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தவேண்டும்.