இலங்கை தமிழர்களுக்கு அநியாயம்; சரத்பவார் ஆவேசம்

புனே: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஒரு நியாயம், இலங்கை அகதிகளுக்கு ஒரு நியாயமா என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புனேயில் நேற்று அளித்த பேட்டி: நாட்டில் பல்வேறு முக்கியமான பிரச்னைகள் நிலவும் நிலையில், அதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவற்றை வேண்டும் என்றே மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் தற்போது நாடு முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

இதற்கு முழு பொறுப்பு மத்திய அரசு தான். இந்த சட்டத்தை சிறுபான்மையினர் மட்டுமின்றி, நாட்டின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்காக கவலைப்படுவோரும் எதிர்க்கின்றனர். வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படுவது ஏன்? இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாதது ஏன்? இது அநியாயம். இவ்வாறு சரத்பவார் கூறினார்.

Related Stories: