திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 11 நாட்களாக எரிந்த மகாதீபம் நேற்றிரவுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து இன்று தீபக்கொப்பரை மலையில் இருந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபவிழா, கடந்த 1ம் தேதி தொடங்கி விமரிசையாக நடந்தது. அதையொட்டி, கடந்த 10ம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கடந்த 11 நாட்களாக மலைமீது மகாதீபம் பக்தர்களுக்கு காட்சியளித்தது. இந்நிலையில் மகாதீபம் நேற்றிரவுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் மலைமீது சென்று தீபத்தை தரிசித்தனர்.