திருவண்ணாமலை: கார்த்திகை மகா தீபத்தை தரிசிக்க 2,668 அடி உயர மலை உச்சிக்கு சென்ற பக்தர்கள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு வாரகாலமாக அகற்றும் பணியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆன்மிக சுற்றுலா பக்தர் ஒருவர் ஈடுபட்டு வருகிறார். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா என எங்கும் முழக்கம் எதிரொலிக்க அர்த்தநாரீஸ்வரர் நர்த்தனம் ஆட அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.