புதுடெல்லி: பொருளாதார மந்த நிலையில் இருந்து மீளும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என, டெல்லியில் நடந்த இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பிரதமர் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் பற்றி பிரதமர் மிகவும் பெருமையோடு மார்தட்டி பேசியிருக்கிறார். ஆனால், நிஜமான சூழ்நிலை அப்படி அல்ல; நேர்மாறாக உள்ளது. பிரதமரின் இதுபோன்ற பெருமை பேச்சுகளும், வெற்று வாக்குறுதிகளும் நாட்டில் நிலவும் நிலவரத்துக்கு எதிரானதாகவே இருக்கின்றன. ஆனால், 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார கனவில் மிதக்கும் அவர், உண்மையான நிலவரத்தை ஏற்கவில்லை. பிரதமர் பதவியில் இருப்பவர் ஒன்றை கூறினால், அது மிக முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும்.