CAA மற்றும் NRC-யை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்..இல்லையெனில், அவை எப்படி மே.வங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பார்க்கிறேன்: மம்தா பானர்ஜி சவால்

கொல்கத்தா: குடியுரிமை சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில், அவை எப்படி மே.வங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பார்க்கிறேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் மற்றும் நேற்று பேரணி நடத்தினார்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து, ஒரே வாரத்தில் 3வது நாளாக இன்றும் மம்தா பானர்ஜி பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகிறார். இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கொல்கத்தா நகரம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. இன்று 3வது முறையாக ஹவுரா மைதானத்தில் இருந்து கொல்கத்தா கடற்கரை வரை பேரணி சென்றார். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, எக்காரணத்தைக் கொண்டும் குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். இதேபோன்று தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் மேற்குவங்கத்தில் இடமில்லை. குடியுரிமை சட்ட விவகாரத்தில் மத்திய அரசு இப்போது பிறப்பு சான்றிதழை கேட்கத் தொடங்கியுள்ளது. குடியுரிமையை யாரும் இழக்க மாட்டார்கள் என்று மத்திய அரசு கூறுகிறது.

ஆனால் இந்த விஷயத்தில் பான் கார்டு, ஆதார் போன்றவற்றை ஏற்க முடியாது என்றும் மத்திய அரசு சொல்கிறது. பின்னர் எதுதான் குடியுரிமையை நிரூபிக்க ஆதாரமாக வேண்டும்? அமித் ஷா பாஜக தலைவர் மட்டுமல்ல. இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார். அவரது வேலை நாட்டில் வன்முறையை தூண்டி விடுவது அல்ல. நாட்டில் அவர் அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்குமான வளர்ச்சி என்பதில் மத்திய பாஜக அரசு நம்பிக்கை கொண்டிருந்தால், குடியுரிமை சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில், அவை எப்படி மேற்கு வங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பார்க்கிறேன், என்று மம்தா சவால் விடுத்துள்ளார்.

Related Stories: