ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து புதிதாக புகாரளிக்க மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை!

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து புதிதாக புகாரளிக்க மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

வழக்கு விவரம்

ஆர்.கே நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது இந்த தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அபிராமபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் யார் பேரையும் குறிப்பிடவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வக்கீல் வைரக்கண்ணன் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

அதேபோல, தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும், தேர்தலின் போது பணம் பெற்ற வாக்காளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி அருண் நடராஜன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி சத்தியநாரயணன் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்திருந்த நிலையில், அபிராமபுரம் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை தனி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ரத்துசெய்து உத்தரவிட்டிருந்தார்.

தேர்தல் ஆணையம் பதில்

இந்நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமானவரித்துறை அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் பணப்பட்டுவாடா புகாரில் தொடர்புடைய அனைவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு கடந்த அக்டோபர் 21ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதை தொடர்ந்து பணப்பட்டுவாடா தொடர்பான மதிப்பீட்டின் தற்போதைய நிலை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் விளக்கங்கள் கேட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: