ராஜீவ் கொலை வழக்கு: தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில் பரோல் விண்ணப்பங்களை நிராகரித்தது ஏன்? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், அவர்களின் பரோல் விண்ணப்பங்களை நிராகரிக்க என்ன காரணம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகியோர் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க கோரி அவரது தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார்.

ஆனால், ரவிச்சந்திரனின் பரோல் மனுவை மதுரை சிறைத்துறை நிராகரித்தது. பரோல் வழங்க இயலாது என்று ரவிச்சந்திரனின் தாயாருக்கு மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம் எழுதியிருநதார். மேலும், 2020ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ரவிச்சந்திரனின் பரோல் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் உயர்நீதிமன்ற மதரை கிளையில் வழக்கு தொடரந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், தனது மகனுக்கு ஒரு மாத காலம் பரோல் கோரிய விண்ணப்பத்தை, உள்ளாட்சி தேர்தல் மற்றும் திருவிழாக்கள் வருவதால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறி மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் நிராகரித்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், அவர்களின் பரோல் விண்ணப்பங்களை நிராகரிக்க என்ன காரணம்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பனர். மேலும், 30 நாட்களுக்கு குறைவாக விடுப்பு கோரினால் வழங்கலாம் என கடந்த முறை கூறிய நிலையில், தற்போது பரோல் விண்ணப்பத்தை நிராகரிக்க என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: