நிர்பயா வழக்கில் கொலை குற்றவாளி அக்‌ஷய்குமார் சிங்கிற்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் கொலை குற்றவாளி அக்‌ஷய் குமாருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அக்‌ஷய்குமார் சிங்கின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான முகாந்திரம் ஏதுமில்லை என்றும் நீதிபதி பானுமதி அமர்வு தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அதன்பின் மீட்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும்   பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் தொடர்புடைவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன. இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி இந்த 4 குற்றவாளிகளில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் வழக்கில் 4-வது   குற்றவாளியான அக்சய்குமார் சிங் மட்டும் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி அக்சய் குமார் சிங் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த  மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்சய் குமார் சிங் மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி சார்பில்   மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த இரு மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர் பானுமதி, அசோக் பூஷன் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து தான் விலகிக் கொள்வதாகத் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வழக்கில் இருந்து விலகியதையடுத்து, அக்சய் குமார் சிங் சீராய்வு மனுவை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு வழக்கை நாளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. அக்சய் குமார் சிங் சீராய்வு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அக்‌ஷய்குமார் சிங்கின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. கொலை குற்றவாளி அக்‌ஷய் குமாரின் தூக்கு தண்டனையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

Related Stories: