ஸ்ரீகரிகோட்டா: சந்திரயான்-3 திட்ட இயக்குநராக வீர முத்துவேலை நியமனம் செய்து இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-2 திட்டத்தில், விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கியது. இதனால், இஸ்ரோ தனது திட்டத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து, சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் மீண்டும் நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. இதற்கான, சந்திரயான் -3 விண்கலத்தை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே சந்திரயான் 2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் போன்ற இயந்திரங்களை உருவாக்கிய வனிதா தலைமையிலான குழுவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சந்திரயான் 3 திட்டத்திற்கு திட்ட இயக்குனராக வீர முத்துவேலை இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் - 2 திட்ட இயக்குநராக இருந்த வனிதா மாற்றப்பட்டிருக்கிறார். அவரது மாறுதலுக்கு இஸ்ரோ அதிகாரபூர்வமாக காரணங்கள் எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-3 திட்ட நிதி: மத்திய அரசு 2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இஸ்ரோவுக்கு ரூ.666 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் 8.6 கோடி ரூபாய் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 12 கோடி ரூபாய் சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்பும் ஏவுகணைத் தயாரிக்கவும், 120 கோடி ரூபாய் ஏவுதளங்கள் மேம்பாடுக்காகவும் இஸ்ரோ ஒதுக்கியுள்ளது. சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு அடுத்த நிலையில் இருக்கும் யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்திற்கு 516 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியை தவிர்த்து கூடுதலாக ரூ.75 கோடி வழங்கக்கோரி மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது. இதில் ரூ.60 கோடி விண்கல இயந்திரங்கள், உபகரணங்களுக்கும், ரூ.15 கோடி, வருவாய் செலவினங்களுக்கும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.