சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவுக்கு 20 மணிநேரத்துக்கு முன்பாக வாக்குசாவடியில் போலீசார் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாநில ேதர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: போலீசார் தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவிற்கு 20 மணி நேரத்திற்கு முன்னர் ஆஜரில் இருக்க வேண்டும். வாக்குச் சாவடியில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மின் விளக்கு வசதி செய்யப்பட்டு, வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உட்பட மற்ற பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இரவு நேரத்தில் வாக்குச் சாவடியை பாதுகாக்க வேண்டும்.
வாக்குச்சாவடியை சுற்றி சின்னங்கள், கொடிகள் உள்ளதா என்பதை பார்த்து, இருந்தால் அதை அகற்ற வேண்டும். ஆண், பெண் வாக்காளர்களை தனித்தனியே வரிசைப்படுத்த வேண்டும்.