பழநி: ஆதரவற்றோருக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி பழநி பக்தர்களை குறிவைத்து செயல்படும் மோசடி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவாரப்பகுதியில் ஏராளமான கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பழநி நகரில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இந்நிலையில் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றவும் ஒரு கும்பல் சுற்றி வருவதாக புகார் எழுந்தது. ஆதரவற்றோருக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கையில் ரசீது புத்தகங்களுடன் ஏராளமானோர் பக்தர்கள் கூடும் இடங்களில் சுற்றித்திரிந்து வருகின்றனர்.