புதுடெல்லி: ஒரே நபராக இந்திய பொருளாதாரத்தை மோடி அழித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாரத் பச்சாவ் பேரணியை நடைபெற்று வருகிறது. பொருளாதார மந்தநிலை, குடியுரிமை சட்டம், விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக இந்த கூட்டமானது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, தனி ஆளாக இந்திய பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அழித்துவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தார். கருப்புப் பணத்தை திரும்பிப் பெற இந்நடவடிக்கை என்று உரையாற்றினார். ஆனால், என்ன நடந்தது. அந்த நடவடிக்கையால் இன்று வரை இந்திய பொருளாதாரத்தால் மீண்டு வர முடியவில்லை. அந்த நேரத்தில் நாடு, 9 சதவிகித வேகத்தில் பொருளாதாரம் வளர்ந்து வந்தது. பொருளாதாரத்தில் சீனாவுடன் இந்தியா போட்டி போட்டு வந்தது. ஆனால், இன்று வெறும் 4% ஆக உள்ளது. மக்கள் வெங்காயத்துக்காக வரிசையில் நிற்கிறார்கள். வெங்காயத்தின் விலை இப்போது கிலோவுக்கு 200 ரூபாயைத் தொட்டுள்ளது.