சென்னை: பதவி உயர்வுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி வளாக கல்லூரியில் 7 ஆசிரியர்கள் போலி சான்றிதழ் சமர்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு வெவ்வேறு நிலைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும், பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றிருக்க வேண்டும். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி வளாக கல்லூரியில் பணியாற்றிய 7 ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக போலி சான்றிதழ் சமர்ப்பித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் இதுவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதுதொடர்பான ஆவணங்களை புகார்தாரர்கள் நேற்று வெளியிட்டனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி வளாக கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் 7 பேர், 6வது ஊதியக்கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தில் இருந்து 7வது ஊதியக்குழுவில் சம்பளத்துக்கான பதவி உயர்வு பெற முயன்று வருகின்றனர். இதற்காக அவர்கள் மும்பை ஐஐடியில் 4 வார கால பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டதாக சான்றிதழ் சமர்ப்பித்தனர்.