கௌசிக ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அலங்காரம்...விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

திருவில்லிபுத்தூர்: கௌசிக ஏகாதசியை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்  ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு 108 புடவை சாத்தும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கௌசிக ஏகாதசியை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி,  கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு கார்த்திகை மாதத்தில் 108 பட்டுப் புடவைகள் சாத்தும் வைபவம் நேற்று நடந்தது.  இதையொட்டி ஆண்டாள், ரங்கமன்னார், பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்கள் ஆகியோர் கோபால விலாச மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

 தொடர்ந்து பட்டர் சுதர்சனன் கௌசிக புராணம் வாசிக்க, மேளதாளம் முழங்க ஆண்டாள், ரங்கமன்னார், பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவைகள் சாத்தப்பட்டன. குளிர்காலம் துவங்குவதை அறிவிக்கும் வகையில் இந்த  பட்டுப்புடவை சாத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியையொட்டி நேற்று கோயிலில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. இரவு முழுவதும் விடிய, விடிய நடந்த இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: