மணப்பாறை: மணப்பாறை அருகே கோயில் விழாவில் 351 கிடா, 300 கோழிகளை வெட்டி கமகம விருந்து நடந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. திருவிழா நிறைவு நாளன்று இரவு மாபெரும் சமபந்தி அன்னதானம் நடத்துவார்கள். இதற்காக விருப்பம் உள்ள மக்கள் காணிக்கையாக அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை வழங்குவார்கள். அன்னதானத்திற்காக 351 ஆட்டு கிடாக்கள், 300 கோழிகள், 150 மூட்டை அரிசி காணிக்கையாக வழங்கப்பட்டது. இதுதவிர பலர் பணமாகவும் காணிக்கை வழங்கினர். இந்த பணத்தை கொண்டு சமையலுக்கு தேவையான இதர பொருட்களை வாங்கினர். வெங்காயம் விலை உயர்ந்திருந்தபோதும், இந்த அன்னதானத்திற்காக 450 கிலோ பெரிய வெங்காயம் ரூ54 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டது. நேற்று காலை சமையல் பணியை ஜெபத்துடன் தொடங்கினர். சில சமையல் கலைஞர்கள் மட்டும் சம்பளத்துக்கு வந்திருந்தனர். 100க்கும் மேற்பட்ட ஆலய பங்கு மக்கள் சமையல் பணியில் உதவினர். மாலை 5மணிக்கு சமையல் முடிவடைந்தது. 150 மூட்டை அரிசியும் சமைக்கப்பட்டது. 351 கிடாக்களைவெட்டி குழம்பு வைத்தனர். 300 கோழிகளையும் குழம்பாக வைத்தனர்.