ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர் கிணற்றில் குதித்து தற்கொலை: மத்திய, மாநில அரசுகளே காரணம் என கடிதம்

ஈரோடு:  ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர் கிணற்றில் குதித்து தற்கொலை  செய்து கொண்டார். மத்திய, மாநில அரசுகளே சாவுக்கு காரணம் என அவர் எழுதிய  உருக்கமான கடிதம் போலீசிடம் சிக்கியது. ஈரோடு மாணிக்கம்பாளையம்  சக்தி நகரை சேர்ந்தவர் கனகராஜ் (42). விசைத்தறி உரிமையாளர். தொழிலில்  நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக கனகராஜ் மனவேதனையுடன் காணப்பட்டார்.  நேற்று முன்தினம் காலை கனகராஜ் ஈரோடு மொக்கையம்பாளையத்துக்கு  தனது பைக்கில் சென்றார். அங்குள்ள ஒரு கிணற்றுக்கு அருகில் பைக்கை  நிறுத்திவிட்டு குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து  ஈரோடு வடக்கு போலீசாரும்  தீயணைப்பு துறையினரும் சென்று கிணற்றில் இருந்து கனகராஜ்  சடலத்தை மீட்டனர்.

விசாரணையில்,  கனகராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பாக அங்கிருந்த மூதாட்டி ஒருவரிடம் தனது  ‘மணிபர்சை’ கொடுத்து இருந்தது தெரிய வந்தது.  அதில் இருந்த கடிதத்தில், என் இனிய அன்பு நண்பர்களே ஜவுளி  தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே,  என்னுடைய மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என எழுதி  வைத்துள்ளார். கனகராஜூக்கு வனிதா (38) என்ற மனைவியும், ஒரு மகன்,  மகள் உள்ளனர்.

Related Stories: