அம்பை: மாஞ்சோலை மலைப்பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் மணிமுத்தாறு அணைநீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் பெருங்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் டிசம்பர் மாதத்தில்தான் அணைகள் நிரம்புவது வழக்கம். இவ்வாண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், நவம்பர் மாதமே பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட பிரதான அணைகள் நிரம்பின. ஆனால் 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை மட்டும் இவ்வாண்டு பரிதாபமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம், தென்காசி, குற்றாலத்தில் பெய்த கூடுதல் மழையை, மணிமுத்தாறு, மாஞ்சோலை பகுதிகள் பெறமுடியாமல் தவித்தன.இதன் காரணமாக கடந்த நவம்பர் 28ம்தேதி 77 அடி தண்ணீர் இருப்பு என மணிமுத்தாறு மந்தகதியில் காட்சியளித்தது. அந்த அணை இவ்வாண்டு சதம் அடிக்குமா என்பதில் கூட சந்தேகம் நிலவியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குளங்களிலும், கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்த சூழலில், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம், பெருங்கால் பாசன விவசாயிகளை கவலைக்குள்ளாக்கி வந்தது.ஏனென்றால் பெருங்கால் பாசனத்தில் 90 அடியை நீர்மட்டம் தாண்டிய பின்னரே தண்ணீர் திறக்கப்படும். இதனால் மணிமுத்தாறு ரீச் விவசாயிகள் கோடைக்காலத்தில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத வகையில் நாலுமுக்கு, மாஞ்சோலை, ஊத்து மலைப்பகுதியில் 150 மி.மீட்டருக்கும் மேலாக மழை கொட்டிதீர்த்தது. அதன் விளைவாக மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகம் காணப்பட்டது.