செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில் கனமழை பெய்து வருவதால் திம்மாவரம் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகர், வைபவ் நகர், பாலாறு நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 5 அடி உயரத்துக்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால், கடந்த 2 நாட்களாக மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் நீஞ்சல்மடு அணையில் நிரம்பியுள்ளதால், கரையோர பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளது.
இந்த நிலையில், நீஞ்சல்மடு அணை நீரை பொதுப்பணி துறை அதிகாரிகள் பாலாற்றில் திறந்துவிட்டும் மகாலட்சுமி நகர் பகுதியில் வெள்ளநீர் வடியவில்லை. சிங்கபெருமாள் கோவில் பகுதி ஜிஎஸ்டி சாலையில் இன்று 3வது நாளாக மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. ஜிஎஸ்டி சாலை பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேரில் ஆய்வு செய்து, அந்த நீரை அகற்ற உத்தரவிட்டார். எனினும், இந்த சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.