பிரதமர் மோடி ஆட்சியில் ஜார்க்கண்டில் நக்சலைட்டுகள் ஒழிப்பு: தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

ராஞ்சி: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் களையெடுக்கப்பட்டதாக  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில், டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. அனைத்து வாக்குகளும் டிச. 23ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதற்கட்டமாக கடந்த 30-ம் தேதி சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச்,  பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை நிறைவடைந்த முதற்கட்ட தேர்தலில் 62.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பெண்கள் அதிகளவில் ஓட்டளித்தனர்.

இந்த தேர்தலில், பாஜ தனித்தும், காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 6,  ஜேஎம்எம் 4, ஆர்ஜேடி 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜக 12 தொகுதிகளிலும் ஹூசைனியாபாத்தில் வினோத்குமார் சிங்கை ஆதரித்தும் களத்தில் நிற்கிறது.

 

இந்நிலையில், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா, சக்ராதர்பூரில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள்  சேகரித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி மற்றும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபார் தாஸ் தலைமையிலான அரசுகள்,  ஜார்க்கண்டிலிருந்து நக்சலைட்டுகளை ஒழித்து, மக்களை வளர்ச்சிப் பாதை நோக்கி இட்டுச்சென்றதாக தெரிவித்தார். பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. 

Related Stories: