சென்னை: தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை மட்டும் அறிவித்து விட்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை அறிவிக்காதது ஒரு அயோக்கியத்தனமான அறிவிப்பு என திமுகவின் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, மாநிலத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புற ஊராட்சி அனைத்துக்கும் ஒன்றாகத்தான் இதுவரை தேர்தல் நடந்துள்ளது. முதல்முறையாக கிராமப்பஞ்சாயத்துக்கள் வரை நடத்திவிட்டு மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிறகு நடத்துவோம் என்று கூறுவது இந்த ஆட்சியின் கையாலாகாத தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. மேலும் கிராமப்பஞ்சாயத்து தேர்தலை 2 கட்டமாக நடத்துகிறது. இதற்கு காரணம் ஒருபகுதியில் தேர்தல் நடைபெறும் போது, மறுபகுதியில் இருப்பவர்கள் தேர்தலை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடத்தான் என குற்றம் சாட்டினார். இதனை அதிமுக அரசு போன தேர்தலில் செய்தனர். இதையடுத்து மாவட்டங்களை பிரித்துள்ளனர். ஆனால் அதில் பல சங்கடங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட பஞ்சாயத்து இருக்கிறது. அப்படியானால் வேலூர் மாவட்டத்தை 3ஆக பிரித்தால், பஞ்சாயத்து 3ஆக இருக்கவேண்டும்.