சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியரிடம் அத்துமீறல்: வடமாநில வாலிபர் கைது

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து லக்னோ செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 4 மணிக்கு உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகள் தங்களுடைய டிக்கெட்டை இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுன்டரில் கொடுத்து போர்ட்டிங் பாஸ் வாங்கி சென்றனர். அப்போது, உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிஜ்ஜூ (30) என்பவர், தனது டிக்கெட்டை கவுன்டருக்குள் கொடுத்தபோது, அங்கிருந்த பெண் ஊழியரிடம், “நீங்கள் அழகாக உள்ளீர்கள்” எனக்கூறி, அந்த பெண் ஊழியரின் கையை பிடித்து இழுக்க முயற்சித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஊழியர் கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்த சக பெண் ஊழியர்கள் அங்கு வந்தனர். இதனை கண்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிஓட முயன்றார். அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த வாலிபரை பிடித்து, அவரது பயணத்தை ரத்து செய்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் அந்த வாலிபரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: