சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உள்ள குளறுபடிகளையும் சரி செய்து உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது, மா.கம்யூ. கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டட மத்தியக்குழு மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது :உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட வேண்டுமென இறுதியாக உத்தரவிட்டுள்ளது. இதற்கு பின்னரும் முறையான தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை. மாநிலம் முழுவதும் தொகுதி வரையறைகள் மேற்கொள்ளப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே நேரடி தேர்தல் என அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல்களை மறைமுகத் தேர்தல் என கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தனித்தனியான மாவட்ட ஊராட்சிகள் அமைக்க வேண்டுமென்ற ஊராட்சி சட்ட விதிகளுக்கு விரோதமாக, ஒரே மாவட்ட ஊராட்சியாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.