வாஷிங்டன்: டெல்லி காற்று மாசு கவலை அளிப்பதாகவும், காற்று மாசால் மனிதர்கள் ‘மாஸ்க்’ போட வழியிருந்தாலும், விலங்குகள் எப்படி ‘மாஸ்க்’ போட முடியும் என்று, பிரதமர் மோடிக்கு கடற்கரை மாடல் அழகி கடிதம் எழுதி உள்ளார். கடற்கரை மாடல் அழகியும், முன்னாள் பிக்பாஸ் சிறப்பு விருந்தினருமான பமீலா ஆண்டர்சன் (52), பிரதமர் மோடிக்கு ‘பீப்பிள் ஃபார் தி எத்தியல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ்’ (பீட்டா) அமைப்பின் கவுரவ இயக்குனர் என்ற முறையில் எழுதிய கடிதத்தில் கூறியதாவது: அரசின் கூட்டங்களிலும், செயல்பாடுகளிலும் ருசியான சைவ (முற்றிலும் தாவரத்தால் பெறப்பட்ட) உணவை மட்டுமே வழங்குவதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வழிநடத்த முடியும். இறைச்சி, முட்டை மற்றும் பால் ஆகியவற்றிற்காக விலங்குகளை வளர்ப்பதால், மனிதனால் தூண்டப்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றங்களில் ஐந்தில் ஒரு பங்கை ஏற்படுகிறது. உங்கள் நாட்டின் கண்டுபிடிப்பு மற்றும் விவசாய வரலாற்றைக் கொண்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சோயா மற்றும் பிற பல்துறை உணவுகளை பயன்படுத்தலாம். நியூசிலாந்து, சீனா, ஜெர்மனி போன்ற பிற நாடுகள் எடுத்த சைவ சார்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நீங்கள் (மோடி) வலியுறுத்தி உள்ளீர். டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது கவலைகளை வெளிப்படுத்திக் கொள்கிறேன். குடியிருப்பாளர்கள் மற்றும் முகமூடிகளை அணியவோ அல்லது வீட்டுக்குள் தங்கவோ முடியாத விலங்குகளைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுகிறோம்.