சோன்பத்ரா: உபி.யில் ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு லிட்டர் பால் கலந்து 81 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு நண்பகலில் ஊட்டச்சத்துக்காக சத்துணவு வழங்கப்படுகிறது. இதில், பாலும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இங்குள்ள சோபான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடா கிராம பஞ்சாயத்தில் உள்ள சாலைபான்வா ஆரம்ப பள்ளியில், கடந்த புதன்கிழமை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது, அங்கு சமையல் செய்யும் பெண் ஒருவர் ஒரு பக்கெட் முழுவதும் நீரை எடுத்து அதில் ஒரு லிட்டர் பாலை கலந்தார். பின்னர் அதை 81 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இந்த வீடியோ காட்சி, வைரலாக பரவி வருகிறது.