பாலவாக்கம் சோழன் நகரில் கிரய பத்திரம் வழங்கும் முகாம்: நாளை மறுதினம் நடக்கிறது

சென்னை: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் பாலவாக்கம் சோழன் நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு கிரய பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட குடிசை பகுதிகளை சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டங்களின் கீழ் மேம்படுத்தப்பட்ட குடிசை பகுதிகளாக மாற்றி, அங்கு வசித்து வந்தவர்களுக்கே வாரியத்தால் ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அந்த நிலங்கள் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டவுடன், ஒதுக்கீட்டுதாரர்களுக்கு கிரய பத்திரம் வழங்கப்படும். அதன்படி, சென்னை பாலவாக்கம் சோழன் நகர் பகுதியில் வசிக்கும் 73 ஒதுக்கீட்டுதாரர்களுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 28ம் தேதி (வியாழன்) சென்னை, மந்தைவெளியில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய எஸ்டேட் அலுவலகத்தில் நடைபெறும்.

மேற்குறிப்பிட்ட திட்டப்பகுதிகளில் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் அல்லது வாரிசுதாரர்கள் தாங்கள் அளிக்கும் மனுவுடன் ஒதுக்கீடு ஆணை நகல், இருப்பிட சான்றுகளாக உணவு பங்கீடு அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல்கள் இணைக்க வேண்டும்.  வாரிசுதாரர்களாக இருப்பின் ஒதுக்கீடுதாரரின் இறப்பு சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் அசல் மற்றும் மனைக்கு முழுகிரயம் செலுத்திய ரசீது, கடன் பெற்றிருப்பின் கடன் தொகை செலுத்திய வாரிய ரசீது நகல்களை இணைத்து வழங்க வேண்டும். கிரயப்பத்திரம் கோரும் ஒதுக்கீடுதாரர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: