சென்னை: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் பாலவாக்கம் சோழன் நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு கிரய பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட குடிசை பகுதிகளை சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டங்களின் கீழ் மேம்படுத்தப்பட்ட குடிசை பகுதிகளாக மாற்றி, அங்கு வசித்து வந்தவர்களுக்கே வாரியத்தால் ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அந்த நிலங்கள் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டவுடன், ஒதுக்கீட்டுதாரர்களுக்கு கிரய பத்திரம் வழங்கப்படும். அதன்படி, சென்னை பாலவாக்கம் சோழன் நகர் பகுதியில் வசிக்கும் 73 ஒதுக்கீட்டுதாரர்களுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 28ம் தேதி (வியாழன்) சென்னை, மந்தைவெளியில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய எஸ்டேட் அலுவலகத்தில் நடைபெறும்.