ஐஎஸ்எல் கால்பந்து சென்னைக்கு முதல் வெற்றி

சென்னை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில், சென்னையின் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், புள்ளிப் பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ள ஐதராபாத், சென்னை அணிகள் மோதின. 4 லீக் ஆட்டத்தில் 1 டிரா, 3 தோல்வியுடன் 1 புள்ளி மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருக்கும் சென்னையின் எப்சி அணி, முதல் கோல் மற்றும் முதல் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்கியது. இரு அணி வீரர்களும் தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால் இடைவேளையின்போது 0-0 என சமநிலை வகித்தன. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இதே நிலை நீடித்தது. 90 நிமிடம் முடிந்து, 5 நிமிட கூடுதல் நேரம் (ஸ்டாப்பேஜ் டைம்) வழங்கப்பட்டது. மிகவும் பரபரப்பாக அமைந்த இந்த கடைசி நிமிடங்களில் சென்னையின் எப்சி அணி வீரர் ஷெம்ப்ரி அபாரமாக கோல் அடிக்க, ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது. ஆனால், இந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை.

அடுத்த நிமிடத்திலேயே ஐதராபாத் அணியின் கில்கலான் பதில் கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதனால் சென்னையின் எப்சி வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்டு கடைசி விநாடிகளில் தாக்குதலைத் தொடர்ந்த சென்னை அணிக்கு, வால்கிஸ் அற்புதமாக கோல் போட்டு 2-1 என்ற கணக்கில் முதல் வெற்றியை வசப்படுத்த உதவினார். இந்த வெற்றியால், கடைசி இடத்தில் இருந்த சென்னையின் எப்சி 4 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 9வது இடத்தை பிடித்தது.

Related Stories: