சோமனூர்: பஞ்சு கொள்முதல் விலையை விட நூல் விலை சரிவால் கோவை மாவட்ட பஞ்சாலைகளில் .ஆயிரம் கோடி நூல் விற்பனை செய்யாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளதால் பஞ்சாலை மற்றும் அதை சார்ந்துள்ள தொழில்களில் உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கோவை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 700 பஞ்சாலைகள் உட்பட தமிழகத்தில் 1,200க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யக் கூடிய நூல் தமிழகத்திலுள்ள விசைத்தறி, பின்னலாடை தொழிலுக்கும், வெளி மாநிலத்திலுள்ள ஜவுளி தொழிலுக்கும் துணி உற்பத்தி செய்ய விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யும் நூலுக்கு, பஞ்சு கொள்முதல் விலையை விட, நூல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதத்தில் பஞ்சாலைகளில் 40 எஸ் வார்பு நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.215 விலை போனது. தற்போது ரூ.185 ஆக விலை குறைந்துள்ளது. 30 எஸ் வார்பு நூல் ரூ.155 இருந்தது. தற்போது, 142 ஆக குறைந்துள்ளது. 26 எஸ் நூல் ரூ.140 ஆக இருந்தது. தற்போது, ரூ130 ஆக குறைந்துள்ளது. நூல் விலை வீழ்ச்சி அடைந்ததால் நஷ்டத்திற்கு ஆளான பஞ்சாலை உரிமையாளர்கள் தங்களது நூல்களை விற்பனை செய்யாமல் இருப்பு வைத்துள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 52 ஆயிரம் டன் நூல் தேக்கம் அடைந்துள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.ஆயிரம் கோடியாகும்.