டிப்பர் லாரி மோதியதில் மின்வாரிய அதிகாரி பலி: டிரைவர் கைது

திருவொற்றியூர்: மாதவரம் மேம்பாலம் அருகே பைக்கில் சென்ற மின் வாரிய உதவி செயற்பொறியாளர் டிப்பர் லாரி மோதி உயிரிழந்தார்.      அம்பத்தூர் மாசிலாமணி நகரை சேர்ந்தவர் ராஜகோபாலன் (53) மணலி மின்வாரிய துணை மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் அம்பத்தூரில் உள்ள தன் வீட்டுக்கு ஆவணம் ஒன்றை எடுப்பதற்காக பைக்கில் மாதவரம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் லாரி டிரைவர் ராஜி (23) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: