சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா குடோனில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தமிழகத்தில் போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகும், இந்த குடோன் சட்ட விரோதமாக இயங்குவதற்கு காவல் துறை, சுகாதாரத்துறை மற்றும் மத்திய கலால் வரித்துறையை சேர்ந்த பலர் லஞ்சம் பெற்றதற்கான டைரி ஆதாரமொன்று அந்த சோதனையில் சிக்கியது. அதனடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்தாண்டு சிபிஐ டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதில் சட்ட வீரோத பண பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. குட்கா விற்பனை மூலம் ரூ.639 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் உரிமையாளர்கள், பங்குதாரர்களின் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏற்கெனவே முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வழக்கில் சிபிஐ தரப்பில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் கூடுதல் ஆணையர் தினகரனுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2ஆம் தேதி டி.கே.ராஜேந்திரன், 3ஆம் தேதி கூடுதல் ஆணையர் தினகரன் ஆஜராக அமலாக்கத்துறை சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.