திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில், வீடுகளில் போர்வெல் அமைத்து டேங்கர் லாரிகளில் நிலத்தடி நீர் திருட்டு நடக்கிறது. இதனால் நிலத்தடிநீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருமழிசை பேரூராட்சி உள்ளது. இப்பகுதியில், இருமருங்கிலும் உள்ள விவசாய நிலங்கள் செங்கல் சேம்பர்களுக்கு என இரக்கமின்றி சுரண்டப்படுகின்றன. மேலும், அரசு மேல்நிலை பள்ளி அருகே உள்ள வீடுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி, ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 டேங்கர் லாரிகளில் சென்னை நகருக்குள் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு டேங்கர் தண்ணீரும் ரூ.3 ஆயிரம் வரை விற்கின்றனர். இதுவும், அனுமதியின்றி நடைபெற்று வருவதால், நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள், தங்களது விளைநிலத்தில் பயிரிட முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.