அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் காதலியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டை, பிள்ளையார் கோயில் தெருவில் தம்பதி இடையே தகராறு நடைபெறுவதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், அந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், இருவரும் கணவன், மனைவி இல்லை என்பதும், அந்த வீட்டில் பாலியல் தொழில் நடப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து, அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் போலீசார் அந்த வீட்டை தீவிர சோதனை செய்தனர். அப்போது, அங்கு மேலும், ஒரு வாலிபரும், இரு பெண்களும் தங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர், அனைவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நெல்லை மாவட்டம், நாங்குநேரி, இட்டமொழியை சேர்ந்தவர் மருதராஜ் (35). இவர் திண்டுக்கல், அலமருதுபட்டு கிராமத்தை சேர்ந்த 29 வயதுடைய இளம்பெண்ணை காதலித்துள்ளார். இதற்கிடையில் மருதராஜ், அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். அங்கு அவர், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், கீரனூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (35) என்பவருடன் சேர்ந்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். மேலும், அங்கு ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
இதோடு மட்டுமல்லாமல், மருதராஜ் தனது காதலியையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இருவரும் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 3 இளம்பெண்களையும் மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் நேற்று மாலை சேர்த்தனர். மருதராஜ், பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.