சென்னை: அதிமுக அரசின் செயல்களை எல்லாம் முறியடித்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.உள்ளாட்சி தேர்தல் குறித்த காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், வெல்லபிரசாத், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, வசந்தகுமார் எம்பி, பொருளாளர் நா.சே.ராமச்சந்திரன், நடிகை குஷ்பு உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திப்பது, எவ்வளவு இடங்களை கூட்டணியில் கேட்டு பெறுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி அளித்த பேட்டி:
வருகிற 30ம் தேதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது.இந்த பேரணியில் தமிழகத்தில் இருந்து சுமார் 5000 பேர் கலந்து கொள்கின்றனர்.