தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை பூச்சம்மாள் தெருவை சேர்ந்தவர் கோதண்டம் (30). இவரது மனைவி ஆரோக்கிய மேரி (26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, நீர்ச்சத்து குறைவு காரணமாக 10 நாட்கள் கழித்து பிரசவம் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதம் 13ம் தேதி ஆரோக்கிய மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் தாய் மற்றும் குழந்தையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், அவரது மாமியாரிடம் கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது. பின்னர், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், கண்ணாடி அறையில் வைத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.