நெல்லை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். விளை நிலங்கள் உள்ளவர்களிடம் விவசாய கூலிகளாகவும், பீடி நிறுவனங்களிலும், பிற கூலி வேலையிலும் ஈடுபட்டு பலர் குடும்பம் நடத்தி வருகின்றனர். குறைந்த ஊதியம் பெறும் இவர்களால் தற்போதைய விலைவாசியில் குடும்பம் நடத்துவது சிரமமாக உள்ளது. இதனால் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் பலர் தங்களது குடும்பத்தின் தேவைக்கு வருமானத்தை மீறி கந்து வட்டிக்கு கடன் பெறுகின்றனர். இவ்வாறு கடன் பெற்ற பல குடும்பங்கள் வட்டியும், முதலும் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, இரு குழந்தைகளுடன் கடந்த 2017 அக்டோபர் 23ம் தேதி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பின் கந்து வட்டி கொடுமையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.