பஸ்சை செல்போன் பேசியபடியே இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் : டிக்கெட் பரிசோதனையின் போது சிக்கினார்

சேலம்: சேலத்தில் இருந்து மல்லசமுத்திரம் சென்ற அரசு பஸ்சை, செல்போன் பேசியபடி  இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசு பஸ்களில் டிரைவர்கள் செல்போன் பேசியபடி பஸ்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதன்படி, சேலம் கோட்ட போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், இதனை கண்காணிக்க போக்குவரத்து கழகங்கள் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் அனைத்து பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில்  இருந்து  மல்லசமுத்திரத்துக்கு கடந்த 3ம் தேதி அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை  சேலத்தை சேர்ந்த சண்முகம் ஓட்டிச் சென்றார்.  பஸ் காளிப்பட்டி சென்றது. அப்போது, அங்கு  பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டது.  அப்போது செல்போன் பேசியபடி பஸ்சை டிரைவர் ஓட்டிச் சென்றார். இதனை பார்த்த டிக்கெட் பரிசோதகர்கள்,   இதுகுறித்து சேலம் கோட்ட போக்குவரத்து அதிகாரியிடம் புகார் செய்தனர்.  விசாரணையில்   டிரைவர் சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: