பிரேசிலியா: பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் கொண்ட அமைப்பின் உச்சி மாநாடு, பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் நடக்கிறது. இதில், அறிவியல், தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டு ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று காலை பிரதமர் மோடி பிரேசில் சென்றடைந்தார். பிரேசிலியா விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘பிரிக்ஸ் மாநாடு உறுப்பு நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் பொருளாதார இணைப்பை விரிவுபடுத்தும்,’ என மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து மாநாட்டின் ஒருபகுதியாக பிரதமர் மோடி நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தனித்தனியாக சந்தித்து பேசினார்.