சென்னை தியாகராயர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை, ஸ்மார்ட் சாலைகள்: மணியடித்து திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்ட நடைபாதை வளாகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  பாண்டிபஜாரில் பொதுமக்கள் வசதிக்காக  39.36 கோடி செலவில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையின் இருபுறங்களிலும் எல்இடி பல்புகள் உள்ள அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையில் உள்ள அனைத்து சுவர்களிலும்  அழகுப்படுத்தும் வகைகளில் பல்வேறு வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் நடைபாதையில் அமரும் வகையில் இருக்கைகள் (ஸ்ட்ரீட் பர்னிச்சர்) அமைக்கப்பட்டது. சாலையில் உள்ள மரங்களை சுற்றி பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வளாகத்தை  சுற்றியுள்ள 14 சாலைகள் ரூ.19.11 கோடி செலவில் ஸ்மார்ட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரூ.39 கோடி செலவில் அழகுபடுத்தப்பட் நடைபாதை வளாகம் மற்றும் ஸ்மார்ட் சாலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக துறை உயர்  அதிகாரிகள், சென்னை மாநகராட்சி இணை ஆணையர், துணை ஆணையர், ஸ்மார் சிட்டி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: