போலீசார் தாக்கி பெண் பலியானதற்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: கள்ளக்குறிச்சியில் போலீசார் தாக்கி பெண் மரணம் அடைந்த சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் உலகங்காத்தான் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த ஐயம்மாள், தனது மகன் செந்தில் குமாருடன் இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார் வாகனத்தை நிறுத்தச் சொல்லி உள்ளனர். செந்தில்குமார் வாகனத்தை ஓரமாக நிறுத்த முயற்சித்தபோது போலீசார் கொஞ்சமும் பொறுமையின்றி செந்தில் குமாரை தாக்கி உள்ளனர். இதில் பின்னால் அமர்ந்திருந்த ஐயம்மாள் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். போலீசாரின் இத்தகைய செயல் கடும் கண்டனத்திற்கு உரியது. உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

Related Stories: