சென்னை: பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தென்கொரியா நாட்டைச் சேர்ந்த ப்ளு ஹோல் நிறுவனத்தின் தயாரிப்பான பப்ஜி விளையாட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த 20 மாதங்களில் குக்கிராமங்கள் வரை இந்த விளையாட்டு பரவியிருக்கிறது. இந்த விளையாட்டு மாணவர்களையும், இளைஞர்களையும் குரூரமான வெற்றி வீரர்களாக்கி, அடுத்தவர்களை அழித்தாவது வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்துவது தான். ஒருவர் களத்தில் உள்ள அனைவரையும் சுட்டுக் கொலை செய்தால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.