வைகை அணையில் நீர்திறப்பு அதிகமானதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பல இடங்களில் பாலங்கள் உடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்

மதுரை: வைகை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் தற்போது இரண்டு தரைப்பாலங்கள் அங்கு வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. விவசாய பாசன வசதிக்காக இன்று வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்த மழை காரணமாக வைகை அணை நிரம்பியது. இதனால் வைகை அணை நீரை பாசனத்திற்கு திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று நேற்று வைகை அணை திறக்கப்பட்டது. மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வைகை அணை நீர் மூலம் பாசன வசதிகள் பெறுவார்கள்.

16-ம் தேதி வரை 7 நாட்களுக்கு 1441 மில்லியன் கனஅடி நீர் இதில் திறக்கப்படும். அதன்பின் இதன் அளவு குறைக்கப்படும். பின் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 386 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படும். இதன்மூலம் மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கர் நிலங்கள் பாசன் வசதி பெறும். இந்த வருடம் இதனால் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வைகையில் தற்போது அதிக அளவில் தண்ணீர் செல்கிறது.

இதனால் வைகை கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து. மக்கள் தாழ்வான பகுதியில் இருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மதுரையில் சில இடங்களில் பாலத்திற்கும் மேல் பகுதியில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. இரண்டு இடங்களில் உள்ள தரைப்பாலங்கள் இதனால் மூழ்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான பாலமான செல்லூர் சிம்மக்கல் தரை பாலங்கள் நீரில் மூழ்கி உள்ளது.

போக்குவரத்து மாற்றம்

பல இடங்களில் பாலங்கள் உடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றப்பட்டு இருக்கிறது. மதுரை நகரின் யானைக்கல் கீழ்ப்பாலம், ஒபுளா படித்துறை கீழ்ப்பாலம் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை வரை தண்ணீர் இப்படி செல்ல வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் அந்த பகுதி வழியாக செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருக்கிறது.

Related Stories: