அஞ்சுகிராமம்: அழகப்பபுரத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்குளம் உள்ளது. இதன் மூலம் 100 ஏக்கர் நெல், வாழை விவசாயம் நடக்கிறது. நிலப்பாறை கால்வாய் மூலம் இந்த குளத்துக்கு தண்ணீர் வருகிறது. மழை காலத்தில் அதிக தண்ணீர் வீணாகி வயல் வெளிகளுக்கு புகுந்து பயிர்களும் நாசமாகுகின்றன. ஆகவே வீணாகும் தண்ணீரை சேமிக்கவும், பொது மக்கள் குளிப்பதற்கு ஏதுவாக நிலப்பாறை கால்வாயின் குறுக்கே தெப்பக்குளத்தில் தடுப்பணை, படித்துறை கட்ட ஆஸ்டின் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஆஸ்டின் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கினார். தொடர்ந்து பணிகள் அனைத்தும் முடிந்தன. தொடர்ந்து நிலப்பாறை கால்வாய் தடுப்பணை மற்றும் படித்துறை திறப்பு விழா நடந்தது. அழகப்பபுரம் பேரூர் திமுக செயலாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கால பெருமாள், ஒன்றிய அவைத் தலைவர் இளங்கோ, செயல் அலுவலர் லவ்லின்மேபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆஸ்டின் எம்எல்ஏ தடுப்பணை மற்றும் படித்துறையை திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் டேவிட், அஞ்சுகிராமம் பேரூர் துணைச் செயலாளர் ஆர்வி சுந்தர்ராஜ், சமூக ஆர்வலர் பீட்டர் ராபின், கிளை செயலாளர் இன்னோசன்ட் ஜோசப் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.